திடீரென கைதான போக்குவரத்துத் திணைக்கள உயரதிகாரிகள் ; நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு பெண் சந்தேக நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் மற்றும் திணைக்களத்தின் இரண்டு உதவி முகாமையாளர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்கவின் உத்தியோகபூர்வ அறையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிவானிடம் கோரிக்கை
இதன்போது, சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தங்கள் கட்சிக்காரர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிவானிடம் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதவானிடம் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்டு, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதோடு, அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்து தீர்ப்பளித்தார்.