மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
அதன்படி, காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0-2.5 மீற்றர் வரை உயர்வதற்கா சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக விடுக்கப்படும் அடுத்தடுத்த அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அத்திணைக்களம் மீனவ மற்றும் கடற்படைச் சமூகத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.