அனுராதபுரம் பயிர்ச்செய்கை கிணற்றிலிருந்து யானையொன்று உடலமாக மீட்பு
அனுராதபுரம் மதவாச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட லுனுபஹிச்சாவ கிராமத்தின் கிகிலிகே வெவ பகுதியில் உள்ள பயிர்ச்செய்கை கிணறு ஒன்றிலிருந்து யானையொன்றின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 7 அடி உயரமும், 30 வயது மதிக்கத்தக்கதுமான ஓர் ஆண் யானையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானை நீண்ட நாட்களாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக குறித்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வலியைக் குறைத்துக்கொள்வதற்காக, இந்த யானை அடிக்கடி நீர்நிலைகளுக்குள் இறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமை போன்று வலியைக் குறைப்பதற்காக இந்த விவசாயக் கிணற்றுக்குள் இறங்கிய யானை, அங்கேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
யானையின் உடல் பல நாட்களாக கிணற்று நீருக்குள் மூழ்கிக்கிடந்த நிலையில், அதிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாகவே கிராம மக்கள் இதனை அவதானித்துள்ளனர்.
யானையின் மரணம் தொடர்பில் மதவாச்சி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.