புதிய மின்கட்டண திருத்தம்; பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிப்பு
இலங்கை மின்சார சபை புதிய மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை இன்று (22.02.2024) ஆம் திகதி பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்ததாக தெரிவித்துள்ளது.
மின்கட்டணத்தை இயலுமான அளவு குறைப்பதற்கு பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
பலர் சாதகமான யோசனைகளை முன்வைத்துள்ளார்கள்.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை முழுமையாக இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையால் ஈட்டப்படும் இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இது தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படுவதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த நேற்று (21.02.2024) ஆம் திகதி புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
வீட்டு மற்றும் மத தலங்களில் மின்கட்டணம் 18 சதவீதத்தாலும், கைத்தொழில்சாலைகள், ஹோட்டல்களுக்கான மின்கட்டணம் 12 சதவீதத்தாலும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மின்கட்டணம் 24 சதவீதத்தாலும் குறைக்கப்படும்.
திருத்தம் செய்யப்பட்ட மின்கட்டண திருத்த யோசனை இன்று (22) பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம், இந்த புதிய கட்டண திருத்தத்தில் முற்றாக நீக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (21.02.2024) ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.