இலங்கை ஜனாதிபதி தெரிவு; மறுப்பு தெரிவித்த இந்தியா!
இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்களிப்பு தொடர்பாக இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் நோக்குடன் இந்தியாவிலிருந்து அரசியல் ரீதியான அழுத்தம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டமை உண்மைக்கு புறம்பானது என இந்தியா கூறியுள்ளது.
சிலரது கற்பனையின் தோற்றப்பாடாகவே இவ்வாறான அறிக்கைகள் அமைகின்றதாகவும் இன்று (20) பிற்பகல் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.
அத்துடன் அது தொடர்பில் ஆதாரமற்றதும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் ஊடக அறிக்கைகள் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம் எனவும் அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த ஊடக அறிக்கைகள் முழுக்க முழுக்க பொய்யானதென நாம் திட்டவட்டமாக மறுக்கின்றோம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
ஜனநாயக வழிமுறைகள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு விதிகள் ஆகியவற்றுக்கு அமைவாக தமது அபிலாஷைகளை நனவாக்க விரும்பும் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்கள் மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.