யாழில் உந்துருளி மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு
யாழில் வீதியைக் கடக்க முயற்சித்த முதியவர் ஒருவர் உந்துருளி மோதியதில் உயிரிழந்தார்.
முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த இளையதம்பி நந்தகுமார் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் அச்சுவேலியில் உள்ள உறவினரை சந்திக்க வந்துள்ளார். இந்நிலையில் இவர் 27 ஆம் திகதி இரவு அச்சுவேலி பகுதியில் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு வீதியை கடப்பதற்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது வீதியால் வேகமாக வந்த உந்துருளி இவர் மீது மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.