இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் முட்டையின் விலை
வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று (19) குளியாப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

முட்டை விலை அதிகரிப்பு
முட்டை விலை அதிகரிப்புக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே நேரடிப் பொறுப்பாளிகள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சோளம் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு சோள உற்பத்தி முட்டைத் தொழிலுக்குத் தேவையான அளவிற்கு போதுமானதாக இல்லை என சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
சோளத்திற்குப் பதிலாக அரிசி உள்ளிட்ட பல்வேறு மாற்றீடுகளைப் பயன்படுத்துவதால் விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் சமிபாட்டுத் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சில மோசடி வியாபாரிகள் விலங்கு உணவுகளில் பல்வேறு இரசாயனங்கள் மற்றும் மருந்துகளைக் கலப்பதன் காரணமாக பெருமளவிலான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தினார்.
இந்த நிலைமையினால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், தினசரி முட்டை உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைகள் குறித்து அறிந்திருந்த போதிலும், இதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை எனவும் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.