குழம்பு ருசியாக இல்லை என கூறியது குற்றமா... கணவனின் நாக்கை கடித்துத் துப்பிய மனைவி
தான் சமைத்த முட்டை குழம்பு ருசியாக இல்லை என்று கூறியதற்காக, கணவனின் நாக்கை மனைவி கடித்துத் துப்பிய விசித்திரமான சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பத்வுன் மாவட்டத்தில் உள்ள தம்பதிக்கு இடையிலேயே இந்த விபரீதம் நடந்துள்ளது.

ஆத்திரமடைந்த மனைவி
சம்பவத்தன்று இரவு மனைவி முட்டை குழம்பு சமைத்துள்ளார். சாப்பிட அமர்ந்த கணவர், குழம்பை ருசி பார்த்த பின்னர், "குழம்பு ருசியாக இல்லை" என குறை கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மனைவி திடீரென கணவனின் நாக்கை மிகக் கடுமையாகக் கடித்து இழுத்துள்ளார். இதில் கணவனின் நாக்குத் துண்டாகி கீழே விழுந்துள்ளது.
வலி தாங்க முடியாமல் அலறிய கணவரை உறவினர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர்.
கணவனின் நாக்கு சுமார் 2.5 சென்டிமீட்டர் (2.5 cm) அளவிற்குத் துண்டிக்கப்பட்டுள்ளது. நாக்கு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை செய்தாலும் அதனை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என வைத்தியர்கள் கைவிரித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நபர் வாழ்நாள் முழுவதும் பேசுவதில் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையலை குறை கூறியதால் கணவனின் நாக்கையே துண்டித்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.