அடுத்தடுத்த டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் உள்ள நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று இரவு டெல்லி பயணம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திடீர் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் இன்று இரவு கோவையிலிருந்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார், இவரோடு முன்னாள் தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி மற்றும் தமிழ்நாடு அரசின் முன்னாள் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக,பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்தித்தது, இந்த கூட்டணி மொத்தம் 75 இடங்களை கைப்பற்றிய நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக 66 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்முறையாக அதிமுகவின் இரு தலைவர்களும் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றனர்.
தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய காவிரி குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாகவும், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் முறையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தமிழகத்தில் தற்போது இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகள் ஆகியவை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அண்மைக்காலமாக சசிகலா தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்களோடு தொலைபேசி மூலம் உரையாடி வருகிறார் மேலும் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்கிற கோரிக்கையை ஊடகங்களில் முன்வைக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்ந்து பயணிக்கும் என தெரிகிறது. இவை குறித்தும் பிரதமருடனான சந்திப்பில் ஆலோசிக்க படலாம் என தெரிகிறது. மேலும் அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் அதிமுகவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை அது குறித்தும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருவதால் நாளை நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர்கள் சிலரையும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்கள்.