உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு ; கோட்டாபயவின் மனு மீதான விசாரணை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வழக்கில், தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான மேலதிக விசாரணை இன்று (24) இடம்பெறவுள்ளது.
இந்த மனுவானது கடந்த ஜூன் 18 ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், எவ்வித அடிப்படையும் இன்றி விசாரணைகளை முன்னெடுத்து பிரதிவாதிகளின் சுதந்திரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.