உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 12 பேர் விடுதலை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட பத்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்களை விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது.
சந்தேக நபர்கள் மீது விசாரணைகளை நடத்திய பயங்கரவாத புலனாய்வுப் குழுவினர், தங்கள் விசாரணைகளை முடித்து, அதன் அறிக்கைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தனர்.
சந்தேக நபர்களை விடுதலை செய்ய உத்தரவு
சட்டமா அதிபரிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இந்த விசாரணையை முடித்து வைப்பதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவு பிறப்பித்தார்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட அலைபேசிகள் மற்றும் பிற வழக்குப் பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, சந்தேக நபர்களுக்கு தொடர்புடைய பொருட்களை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.