உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் ; சுரேஷ் சலே தடுப்புக்காவல் நீடிப்பு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 01 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுவரை அவரைத் தடுத்து வைக்கக் காவலில் வைத்திருக்குமாறும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் சுரேஷ் சலே இன்று (20) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே , குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.