வீதி சோதனையில் நின்ற பொலிஸாரின் கையை கடித்த நபர்
கேகாலை, ரன்வல பகுதியில் பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்து காயப்படுத்திய சந்தேக நபர் கேகாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் கேகாலை - ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸ் உத்தரவை மீறி சென்ற நபர்
சம்பவ தினத்தில் , கேகாலை, ரன்வல பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், இரவு 10 .00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளனர்.
எனினும் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் பொலிஸ் உத்தரவையும் மீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளனர். பின்னர் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பொலிஸ் மோட்டார் சைக்கிளில் சந்தேக நபரை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபர் , கேகாலை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வலது கையைக் கடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் பொலிஸாரின் விசாரணையில் சந்தேக நபர் மதுபோதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.