உணவுப் பொதிக்குள் போதைப்பொருள்; சம்பவத்தால் ஷாக்!
களுத்துறை சிறைச்சாலைக்கு உணவுப் பொதிக்குள் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற இருவரை அங்குருவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மில்லனிய - படகொட வீதியில் பொலிஸாரால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு சந்தேகநபர்களும் சோதனையிடப்பட்டுள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலைக்கு உணவுப் பொதி
போதைப்பொருள் குற்றச்சாட்டிற்காக களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக அவர்கள் சென்றுகொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து, மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது, இரண்டு 'மிக்ஸ் ரைஸ்' உணவுக்குள் மிளகாய் பேஸ்ட் போட்டிருந்த சிறிய பொலித்தீன் உரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பேசி என்பனவும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அதேசமயம் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக முன்னர் போதைப்பொருள் தொடர்பாக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் அங்குருவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.