திடீர் சோதனையில் பிடிபட்ட சாரதிகள் ; சேவையிலிருக்கும் போது போதைப்பொருள் பாவனை
கொட்டாவை, மகும்புர பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின் போது, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் நால்வர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பரிசோதனை
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர், வைத்தியர் தலைமையிலான குழுவினர், குறித்த நிறுவனத்தின் நடமாடும் ஆய்வக பஸ் வண்டியினுள் வைத்து இப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பொதுப் போக்குவரத்தில் ஒழுக்கமான மற்றும் போதைப்பொருள் அற்ற பணியாளர்களை உருவாக்குவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
நேற்று காலை நடத்தப்பட்ட இப்பரிசோதனையின் போது, சுமார் 150 பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடுமையான சட்ட நடவடிக்கை சாரதிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், வீதி விபத்துக்களைக் குறைக்கவும் இவ்வாறான விசேட செயற்திட்டங்கள் அத்தியாவசியமானவை என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், போதைப்பொருள் பயன்படுத்தியதாக அடையாளம் காணப்பட்ட சாரதிகளுக்கு எதிராக நிறுவன ரீதியான ஒழுக்காற்று விதிகளின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், பொது சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சு, இலங்கை பொலிஸார் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம், பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்து சேவையை நாடளாவிய ரீதியில் உறுதி செய்வதற்காக மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.