தலைவாசலில் தவறியும் இந்த தவறுகளை செய்ய கூடாதாம் ஏன் தெரியுமா?
ஒரு வீட்டை கட்டும் பொழுது முதன்முதலாக பூமி பூஜை செய்வது உண்டு. அதற்கு அடுத்ததாக நிலை வாசல் வைக்கும் பொழுது தான் பூஜை செய்வார்கள்.
வாசலுக்கு அத்தகைய ஒரு மகிமை உண்டு. தலைவாசல் என்பது வீட்டில் உயிர் மூச்சு போன்றது. அதனால் தான் அந்த இடத்தில் விளக்குகளை வைக்கிறார்கள்.
தலைவாசல்
ஒரு வீட்டில் முதலில் பிரதானமாக நாம் பார்க்க வேண்டியது தலைவாசல் தான். இதை எந்த அளவிற்கு சுத்தபத்தமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு நம்மிடம் செல்வ வளமும் நிம்மதியும் இருக்கும் என்கிறது சாஸ்திரங்கள்!
பெரிய பெரிய வீடுகளில் எல்லாம் நிலை வாசலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அந்த காலம் முதல் இன்று வரை தலைவாசலில் மஞ்சள், குங்குமம் இட்டு விளக்கு ஏற்றி வருபவர்களும் உண்டு.
தலை வாசலில் செய்ய கூடாதவை
தலை வாசலில் குலதெய்வ வாசம் உண்டு என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் கதவின் மீது ஏறி நின்று விளையாடுவது கூடாது.
கதவின் தாழ்பால் கீச் கீச் என்று சத்தம் வரக்கூடாது. அதை உடனடியாக எண்ணெய் விட்டு சரி செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
செய்ய வேண்டியவை
அந்த அளவிற்கு முக்கியத்துவம் தர வேண்டிய இந்த தலை வாசலில் மஞ்சள் வைத்து தான் குங்குமம் வைக்க வேண்டும்.
சிலர் சந்தனம் வைத்து குங்குமம் வைப்பது உண்டு. சந்தனம் என்பது ஆண் தெய்வங்களுக்கு உரியது.
ஆஞ்சநேயர், விநாயகர், முருகர் போன்ற தெய்வங்களுக்கு உரிய இந்த சந்தனத்தை நிலை வாசலில் வைக்கக்கூடாது.
மஞ்சள் வைப்பதன் நோக்கம்
மகாலட்சுமியை வரவேற்கவே தலை வாசலில் மஞ்சள் வைக்கப்படுகிறது. மஞ்சள் வைத்து குங்குமம் இட்டு இரண்டு புறமும் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கினை தரையில் வைத்து ஏற்றக் கூடாது.
தலைவாசலில் ஏற்றக்கூடிய விளக்கானது சிலர் பரம்பரை பரம்பரையாக ஏற்றி வரும் விளக்காக இருக்கும். அவ்விளக்குகள் இல்லாவிட்டால் அகல் விளக்குகளில் மட்டும் தீபம் ஏற்றி வழிபடலாம்.
மண் அகல் விளக்கு இயற்கையால் உருவாகக்கூடியது. எனவே அதற்கு தனித்துவம் வாய்ந்த சக்திகள் உண்டு. இதற்கு தோஷங்கள் எதுவும் கிடையாது.
விளக்கு வைக்க கூடாதவர்கள்
தீட்டு உள்ளவர்கள் தீட்டு காலங்களில் நிலை வாசலில் விளக்கு வைக்க கூடாது. வீட்டில் வேறு யாராவது விளக்கு வைத்து ஏற்றினால் தீட்டு உள்ளவர்கள் வாசலை தாண்டி செல்லக்கூடாது.
அதனால் அன்றைய நாள் தலைவாசலில் விளக்கு ஏற்றாமல் இருப்பது நல்லது. ஆண்களாக இருப்பினும் கோவணம் அணியாமல் தலை வாசலை தாண்டி செல்லக்கூடாது இது மிகப்பெரிய பாவமாகும் என்று கூறப்படுகிறது.
எவ்வாறு ஏற்ற வேண்டும்
வீட்டில் வேறு எந்த ஒரு விளக்கை நீங்கள் ஏற்றினாலும் வத்திக்குச்சியால் ஏற்றுவதை விட அகல் விளக்குகளில் முதலில் ஏற்றிவிட்டு அந்த அகலினை கொண்டு மற்ற விளக்குகளை ஏற்றுவது தான் முறையாகும்.
இது மிக சிறந்த பலன்களை கொடுக்கும். அத்தகைய மகத்துவம் வாய்ந்த அகல் விளக்குகளை தினந்தோறும் தலைவாசலில் வைத்து விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.
தினமும் இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை, குபேர வாசம் செய்யக்கூடிய வியாழக்கிழமையில் ஏற்றலாம். இதனால் வாழ்க்கையில் நிம்மதியும், செல்வ வளமும் அதிகரிக்கும்.