பூஜை அறையை சுத்தம் செய்யும் போது இந்த தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்
வீட்டில் தெய்வீக தன்மையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை போல், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும். சில தவறுகளை தவிர்ப்பதால் தெய்வங்களின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
வீட்டில் உள்ள மிக முக்கியமான இடங்களில் ஒன்று பூஜை அறை. இது தெய்வசக்தி குடிகொள்ளும் இடமாகும். வீடு சுபிட்சமாக இருப்பதற்கான மொத்தம் ஆற்றலும் உருவாகும் இடம் என்பதால், இதனை பராமரிப்பதற்கு மட்டுமல்ல, சுத்தம் செய்வதற்கும் சில விதிமுறைகள் நம்முடைய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
சாஸ்திரங்களின்படி, வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்யும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் பூஜை அறையை சுத்தம் செய்யும் போது தெரியாமல் செய்யும் சிறிய தவறுகள் கூட கடவுளின் கோபத்திற்கு ஆளாக்கி விடும். அதோடு வீட்டில் வறுமை, துன்பம், சண்டை, நிம்மதியின்மை போன்ற துன்பங்களும் வரக்கூடும்.
பூஜை அறைக்கான விதிகள்
தூய்மை, நறுமணம், அமைதி ஆகியவை இருக்கும் இடத்தில் எப்போதும் தெய்வீக தன்மை குடிகொள்ளும். அதை மேலும் வலு சேர்க்க தெய்வ சக்தியை வீட்டில் எப்போதும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சாஸ்திரங்களில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. பூஜை அறை என்பது தெய்வீக ஆற்றல் குடிகொள்ளும் இடம் என்பதால் இதை சரியான திசையில், சரியான முறையில் அமைப்பதும், பராமரிப்பதும் முக்கியம்.
வீட்டில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையே பூஜை அறை அமைக்க ஏற்ற திசையாகும். கிழக்கு மற்றும் வடக்கு திசைகள் மங்கலகரமானதாக சொல்லப்படுகிறது. இந்த இடத்தை சுத்தம் செய்யும் போது செய்யக் கூடாத தவறுகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பூஜை அறையில் சுத்தம் செய்யும் போது செய்ய கூடாத தவறுகள்
இரவில் சுத்தம் செய்யாதீர்கள்
சாஸ்திர முறைகளின் படி, வீட்டில் உள்ள பூஜை அறையை இரவில் ஒருபோதும் சுத்தம் செய்யக்கூடாது. உண்மையில், மாலை ஆரத்திக்குப் பிறகு, கடவுள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம். அந்த நேரத்தில் சுத்தம் செய்வது கடவுளின் தூக்கத்தைக் கெடுக்கும். தவறுதலாக கூட கோவிலை இரவில் சுத்தம் செய்யக்கூடாது. அதோடு அந்த சமயத்தில் சுத்தம் செய்து குப்பைகளை வெளியேற்றும் போது, வீட்டில் உள்ள தெய்வீக சக்திகள் நீங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி இரவில் வீட்டை செய்வதால் மகாலட்சுமியின் கோபத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும்.
ஏகாதசி திதியில் சுத்தம் செய்யக்கூடாது
ஏகாதசி திதி மற்றும் வியாழக்கிழமைகளில் பூஜை அறையை மறந்தும் சுத்தம் செய்து விடாதீர்கள். இந்த நாட்களில் பூஜை அறையை சுத்தம் செய்வது வீட்டில் வறுமையையும் துரதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். இது பெருமாளை வழிபட்டு, அவரின் அருளை பெறுவதற்கான மிக முக்கியமான விரத நாளாகும். அதே போல் வியாழக்கிழமை மங்கலங்களை அருளும் குரு பகவானுக்குரிய நாளாகும். இந்த நாட்களில் பூஜை அறையை சுத்தம் செய்வது வீட்டில் இருக்கும் நல்ல ஆற்றல்களை வெளியேற்றி விடும்.
சோப்புக்களை பயன்படுத்தக் கூடாது
சுவாமி விக்ரஹங்கள், பூஜை சாமான்கள் ஆகியவற்றை சுத்தம் செய்வதற்கும், சுவாமி படங்களை துடைப்பதற்கும் வீட்டில் வழக்கமாக பாத்திரம் துலக்க பயன்படுத்தும் சோப்புக்களை பயன்படுத்தி சுத்தம் செய்யக் கூடாது. விக்ரஹங்கள், பூஜை சாமான்களை சுத்தம் செய்வதற்கு சுத்தமான தண்ணீர் மற்றும் துடைப்பதற்கு சுத்தமான துணி மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவற்றை மற்ற செயல்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
படங்களை மாற்றி வைக்கக் கூடாது
சுவாமி படங்களை சுத்தம் செய்த பிறகு வாசனை மிகுந்த சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் சுவாமி படங்களை அடிக்கடி இடம் மாற்றி வைக்கக் கூடாது. அழகிற்காகவோ, நம்முடைய விருப்பத்திற்காகவோ சுவாமி படங்களை வைக்கக் கூடாது. எந்த தெய்வத்தின் படத்தை எப்படி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, சுத்தம் செய்த பிறகும் அதே இடத்தில் வைக்க வேண்டும்.