வீட்டிற்குள் நடந்த கொடூரம் ; கூரிய ஆயுதத் தாக்குதலில் பெண் படுகொலை
மொனராகல, பிபிலை - ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்திரிகா ஷியாமலி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வீட்டின் வரவேற்பறையில் பெண் இரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இதன்போது அவருக்கு அருகிலேயே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான துமிந்த என்பவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர். சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில்,

தனது மனைவி கொழும்பில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், அழகு நிலையத்திற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்ய, தற்போது காயமடைந்துள்ள துமிந்த என்பவருடன் தனது மனைவி டுபாய் சென்று திரும்பியுள்ளார்.
அதன் பின்னர், மனைவியை என்னிடம் அனுப்பு, இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன் என அந்த நபர் தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.
மனைவியின் சில புகைப்படங்களை தனது கைபேசிக்கு அனுப்பியதாக கணவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மனைவியிடம் கேட்டபோது, அவருக்கும் அந்த நபருக்கும் இடையில் தொழில் ரீதியான தொடர்பே தவிர வேறெதுவும் இல்லை என அவர் மறுத்துள்ளார்.
சம்பவத்தன்று கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண்ணிற்கும் சந்தேகநபருக்கும் இடையில் நிலவிய தகாத உறவு அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறு இந்த கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.