திருமண மண்டபத்திற்குள் நுழைந்த வெறி நாய்; அலறி ஓடிய விருந்தினர்கள்; 60 பேருக்கு நேர்ந்த கதி!
இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், மணப்பெண்ணின் விடைபெறல் நிகழ்வின் போது வெறிநாய் ஒன்று புகுந்து சரமாரியாக கடித்ததில் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

109 பேர் வெறிநாய்க்கடி சிகிச்சை
பிசௌலி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பில்சி வீதியில் உள்ள அபிநந்தன் திருமண மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை (20) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மண்டபத்திற்குள் நுழைந்த நாய், அங்குள்ளவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. திடீரென நடந்த இந்தத் சம்பவத்தால் திருமண மண்டபத்தில் நெரிசல் ஏற்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடிய போது சிலர் கீழே விழுந்து காயமடைந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மண்டபத்திற்குள் அட்டகாசம் செய்த நாய், பின்னர் வீதிக்கு வந்து அங்கு சென்றவர்கள் மற்றும் கடைக்காரர்களையும் தாக்கியுள்ளதுடன் கிராமத்தை நோக்கி ஓடிய அந்த நாய், அங்கிருந்த கால்நடைகளையும் கடித்ததாகத் தெரிகிறது.
காயமடைந்தவர்களில் 9 முதல் 40 வயது வரையான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குகின்றனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து ஆரம்ப சுகாதார நிலைய வைத்திய அதிகாரி அரவிந்த் வர்மா கூறுகையில், திங்கட்கிழமை அன்று மொத்தம் 109 பேர் வெறிநாய்க்கடி சிகிச்சைக்காகப் பதிவு செய்துள்ளதாகவும், அதில் சுமார் 60 பேர் திருமண மண்டபச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.