நாட்டில் விசர்நாய்க்கடி அச்சுறுத்தல்; 14 மரணங்கள்
இலங்கையில் விசர்நாய்க்கடி அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருவதாகவும், இதுவரையில் 14 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே , விலங்குகள் கடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் சமூக விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் அதுல லியனபத்திரன கருத்துத் தெரிவிக்கையில்,

விசர்நாய்க்கடி நோய் 100 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது
விசர்நாய்க்கடி நோய் 100 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என்றாலும், அதனை முழுமையாகத் தடுக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார். அண்மைய மரணங்களில் பெரும்பாலானவை புத்தளம், குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 250,000 விலங்குக் கடி சம்பவங்கள் பதிவாகின்றன, இதில் பெரும்பாலானவை நாய்க்கடிகளாகும். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளமை அண்மைய மரணங்களுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
விசர்நாய்க்கடி நோயைத் தடுக்க செல்லப்பிராணிகளுக்குச் சரியான முறையில் தடுப்பூசி ஏற்றுதல், விழிப்புணர்வை அதிகரித்தல், விலங்குகள் கடித்தவுடன் காலம் தாழ்த்தாது சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற ஆலோசனைகளையும் நிபுணர்கள் வழங்கியுள்ளனர்.
சிறிய காயமாக இருந்தாலும் அதனைப் புறக்கணிக்க வேண்டாம் என்றும், மேலதிக மரணங்களைத் தவிர்க்க உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் விசர்நாய்க்கடி நோயினால் ஏற்படும் மரணங்களைப் பூச்சியமாகக் குறைப்பதே இலக்காகும் எனவும் குறிப்பிட்டார்.