தெரியாதவர்களிடம் வாங்காதீர்கள்; மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!
தெரியாதவர்கள், குளிபானமோ அல்லது வேறு ஏதாவது பொருகளோ கொடுத்தால் அதனை பெறவேண்டாம் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவில், இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு, மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கி அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் கொலை முயற்சியிலிருந்து தப்பியுள்ளார்.

மட்டக்களப்பு சம்பவங்கள்
இந்த நிலையிலேயே பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சந்தேக நபர்கள் பொது இடங்கள் அல்லது பொதுப் போக்குவரத்தின் போது மக்களிடம் மிகவும் நெருக்கமாகப் பழகி நம்பிக்கையைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, போதைப்பொருள் அல்லது மயக்க மருந்து கலந்த டொபி, சொக்லேட், உணவு, பானங்கள் வழங்குவதுடன், விஷ ஸ்ப்ரே (Spray) அல்லது மிளகாய்த் தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை செயலிழக்கச் செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொது இடங்களில் தெரியாதவர்கள் வழங்கும் வாகன போக்குவரத்து உதவிகளை ஏற்கும் போது கவனமாக இருக்குமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பழக்கமில்லாதவர்கள் வழங்கும் எந்தவொரு உணவு அல்லது பானங்களையும் எந்தக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம் என்பதுடன், பணம் மற்றும் நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் பொது மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக 119 அல்லது 118 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.