புதிய நாமத்தில் அரிசி விநியோகம் ; கொழும்பிற்கே முதலிடம்
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு (PMD) சொந்தமான நெல் அரிசியாக மாற்றப்பட்டு அடுத்த மாதம் முதல் PMB அரிசி வர்த்தக நாமத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு விலையை விடவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு PMB அரிசி வர்த்தக நாமத்தின் கீழ் அரிசி விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி அடுத்த வாரத்திற்குள் கொழும்பு மக்களுக்கு அரிசி விற்பனை செய்யப்படும் என்றும், கொழும்பில் பல்வேறு இடங்களில் தேசிய உணவு ஊக்குவிப்பு சபை லொறிகள் மூலம் 5 கிலோ மற்றும் 10 கிலோகிராம் வரையிலான அரிசிப் பைகள் விற்பனை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி 200,000 அரிசி மூட்டைகளின் முதல் தொகுதி கொழும்பில் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும் அடுத்த பருவகாலத்தின் பின்னர் சதொச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகள் ஊடாக PMB அரிசி வர்த்தக நாமத்தின் கீழ் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.