இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் நோய் தொற்று
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்ப்ளூவென்சா ஏ மற்றும் பி தொற்றுகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, மழைக் காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகாலத் தொற்றுநோய் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் குழந்தைகள் நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் மகேஷக விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்ப்ளூவென்சா
இதனால், பகல் நேர பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல சிறுவர்களுக்கு திடீர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் சோர்வு ஏற்படுவதால் இந்த நோய் பல வடிவங்களில் தோன்றும் என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிலருக்கு சளி போன்ற அறிகுறிகள், காது தொற்று, மூச்சுத்திணறல்களும் ஏற்படலாம் என்றும் வைத்தியர் மகேஷக விஜயவர்தன தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, நீரிழப்பு ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரிதான சந்தர்ப்பங்களில், இன்ப்ளூயன்ஸா நரம்பு மண்டலத்தைப் பாதிக்கலாம் என்றும் வைத்தியர் மகேஷக விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள குழந்தைகள் நிமோனியா மற்றும் கடுமையான சுவாச சிக்கல்களுக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று வைத்தியர் விஜயவர்தன கூறினார்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அறிகுறிகளுக்காக உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன், கடினமான சுவாசம், தொடர்ச்சியான வாந்தி, பசியின்மை அல்லது அசாதாரண மயக்கம் உள்ளிட்ட கடுமையான நோயின் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் வைத்தியர் மகேஷக விஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.