யாழில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பொலிசாருக்கு ஏமாற்றம்
இந்தியாவில் இருந்து படகொன்றில் 350 கிலோ கேரளா கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்படுவதாக , யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காத்திருந்த பொலிஸாருக்கு பெரும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகில் போதைப்பொருட்களை கடத்தி வந்தனர் எனும் குற்றச்சாட்டில் இருவரையும் , அவர்களை அழைத்து செல்ல காத்திருந்த ஒருவரையுமாக மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

GPS உதவியுடன் காத்திருந்த பொலிஸார்
இந்தியாவில் இருந்து படகொன்றில் 350 கிலோ கேரளா கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்படுவதாக , யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , தடங்காட்டி (GPS) உதவியுடன் , பொலிஸார் யாழ்ப்பாண கரையோர பகுதிகளில் பாதுகாப்பினை பலப்படுத்தி இருந்தனர்.
கஞ்சா கடத்தி வரும் படகினை எதிர்பார்த்து பொலிஸார் காத்திருந்த வேளை படகில் இருவர் மாத்திரமே கரை திரும்பியுள்ளனர்.
அதனை அடுத்து படகில் வந்த இருவரையும் கைது செய்த பொலிஸார் , அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , படகு கரையொதுங்கிய இடத்திற்கு சற்று தொலைவில் , இருவரையும் அழைத்து செல்ல மோட்டார் சைக்கிளில் காத்திருந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து , 130 மில்லி கிராம் போதைப்பொருளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட படகு , மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் , கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை . இருவராலும் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் , கடலில் வைத்து வேறு படகுக்கு மாற்றபட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.