பெலாரஸின் ‘பெலாவியா’ நேரடி விமானச் சேவைகள் மீண்டும் இலங்கைக்கு
பெலாரஸ் நாட்டின் தேசிய விமானச் சேவை நிறுவனமான 'பெலவியா' இலங்கைக்கான தனது நேரடி விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் இந்த விசேட விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பெலவியா நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த விமானச் சேவைகள் வாரம் ஒருமுறை செவ்வாய்க்கிழமைகளில் மாத்திரம் பரந்த அளவிலான 'எயார்பஸ் ஏ330-200' ரக அதிநவீன விமானங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:50 மணிக்கு பெலாரஸ் நாட்டின் மினஸ்க் நகரிலிருந்து புறப்படும் விமானம், அன்றைய தினம் மதியம் 12:40 மணிக்கு இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கமாக, அன்றைய தினம் பிற்பகல் 2:40 மணிக்கு மத்தள விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம், அதே நாள் இரவு 10:10 மணிக்கு மினஸ்க் நகரைச் சென்றடையும்.
பெலாரஸ் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நேரடி விமானப் பயணக் காலம் தோராயமாக 9.5 மணித்தியாலங்கள் முதல் 10 மணித்தியாலங்கள் வரை அமையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.