ஜனாதிபதியை சந்தித்த முக்கியஸ்தர்; இருதரப்பு உடன்படிக்கை
நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் நேபாள தூதுவர் பாசு தேவ் மிஷ்ரா கலந்து கொண்டார்.
பல்கலைக்கழகக் கல்வி மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை இரு நாட்டு இளைஞர், யுவதிகளுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்க இளைஞர் பரிமாற்றத் திட்டமொன்றை (Youth Exchange Program) நடைமுறைப்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.
இந்நிலையில் அதற்கான அடுத்த கட்டப் பணிகள் இந்நாட்டு வெளியுறவு அமைச்சுக்கும் நேபாள அரசாங்கத்துக்கும் இடையே முன்னெடுக்கப்படவுள்ளன.