பாதாள உலகக் குழு உறுப்பினரின் கல்லறையை தோண்டும் மர்ம நபர்கள்!
மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைத் தோண்டப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி உயிரிழந்த நபரின் உறவினர்களால் மத்தேகொட பொலிஸில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குற்றச்செயல்கள்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச்செயல்கள் தொடர்பில் சிறையில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் அஸ்மான் செரிப்டீன் என்பவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடமே இவ்வாறு தோண்டப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய இவர், கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபராக அடையாடப்படுத்தப்பட்டார்.
கடந்த ஓகஸ்ட் 06ஆம் திகதி இரவு சுமார் 10.20 மணியளவில் மகசின் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது இடம்பெற்ற தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் உடல் மத்தேகொடவில் உள்ள உறவினரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், மத்தேகொட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
எனினும், உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த குழியின் கால் பகுதி அமைந்திருந்த பக்கத்திலிருந்து சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு யாரோ தோண்டியிருந்தமை அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ எவ்வித அறிவிப்பும் வழங்காமல், சில பணியாளர்கள் குழியை மீண்டும் மூடியதாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மத்தேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக குமாரவின் ஆலோசனையின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.