டயகம சிறுமி உயிரிழப்பு; மேலும் சில பெண்களிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியை கொழும்புக்கு அழைத்துச் சென்ற தரகரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரிஷாத் வீட்டில் பணிபுரிந்த மேலும் சில பெண்களிடம் விசாரணை நடவடிக்கையை நேற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
டயகம சிறுமியின் மரணம் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழுவினர் டயகமவுக்குச் சென்று விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி உயிரிழந்த சிறுமியை கொழும்புக்கு அழைத்துச் சென்ற தரகரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரிஷாத் வீட்டில் பணி புரிந்த மேலும் சில பெண்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக டயகம தோட்டத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இதன் போது, பிரதான பொலிஸ் பரிசோதகர் பெண் அதிகாரி வருணி போகஹவத்த உள்ளிட்ட விசேட குழுவினரால் விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமியின் சடலம் டயகம தோட்ட பொதுமயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பொது மயானத்துக்கு பொலிஸா ரால் விசேட பாதுகாப்பு வழங்கப்பட் டுள்ளதுடன், நீதிமன்றத்தின் உத்தரவின் படி நேற்றைய தினம் குறித்த சிறுமியின் சடலம் வெளியே எடுக்கப்படும் என நினைத்து டயகமவைச் சுற்றியுள்ள ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் கல்லறைக்கு அருகில் காத்தி ருந்தனர்.
எனினும் நீதிமன்ற உத்தரவின் பேரில் புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டெடுப் பதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் குறித்த சிறுமியின் சடலம் வெளியே எடுக்கப்பட்டு மீண்டும் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பி அனுப்பப்படும் என்றும் நுவரெலியா மாவட்ட பொலிஸ் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.