புலிகளைத் தோற்கடித்தவர்கள் இன்று வெளிநாட்டில் கூலிப்படையாக...
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே இன்று வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதாக வெளியாகும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறும் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
உக்ரைன் – ரஷ்யப் போரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் கூலிப் படைகளாக இணைந்து செயற்படுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
போலியான வாக்குறுதிகளுக்கு அடிபணிந்த வீரர்கள்
இந்தப் போரில் இலங்கையர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிக சம்பளம், குடியுரிமை, உள்ளிட்ட போலி வாக்குறுதிகளால் அழைத்துச் செல்லப்படுகின்ற விரர்கள், அங்கு கூலிப்படையாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் எமது தேசத்தின் பெருமையாக இருந்த இந்த படைவீரர்கள் இன்று போலியான வாக்குறுதிகளுக்கு அடிபணிந்துள்ளதாகவும், போர் வீரர்கள் மற்றும் தேசபக்தர்கள் என்று வரையறுக்கும் விழுமியங்களையும் அவர்கள் கைவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடமை, மரியாதை மற்றும் தாய்நாட்டிற்கான விசுவாச உணர்வு ஆகியவற்றால் இராணுவ வீரர்கள் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இன்று பணம் மற்றும் நிலையற்ற பெருமைக்காக தங்களின் விசுவாசத்தை கைவிடும்படி தூண்டப்படுவதாக கூறியுள்ள சவேந்திர சில்வா, கூலிப்படை என்பது உன்னதமாக போர் நடவடிக்கை அல்ல என்றும் மாறாக இது ஆபத்தான பாதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.