சிறையில் உள்ள தேசபந்துவிற்கு வீட்டிலிருந்து உணவு!
சிறையில் உள்ள, இலங்கை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (24) முதல் அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.
ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்
வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், கண்டியில் உள்ள தும்பர சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டு, வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி கோரியிருந்தார்.
குறித்த கோரிக்கையை பரிசீலித்த சிறைச்சாலைத் திணைக்களம், வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அவருக்கு அனுமதி அளித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அதன்படி, தேசபந்து தென்னகோன் மூன்று வேளை உணவுக்கும் வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவைப் உண்ணும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.