இ.போ.ச வை விற்காதே; யாழில் வெறிச்சோடிய மத்திய பேருந்து நிலையம்
தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்று (28) அதிகாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
அதற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே கூட்டு நேர அட்டவணை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.
பயணிகள் திண்டாட்டம்
இதேவேளை இணைந்த நேர அட்டவணை மூலம் அரசாங்கம் இலங்கை போக்குவரத்து சபையை கலைக்க முயற்சிப்பதாக ஐக்கிய தொழிற்சங்க அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.
இதேவேளை தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், வேலைநிறுத்தம் நியாயமற்றது அரசாங்கத்தை சிரமப்படுத்தும் ஒரே நோக்கத்துடன் தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து போக்குவரத்து சபை சாரதிகளையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்பவர்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதேவேளை பேருந்துகள் சேவையில் ஈடுபடாதமையால் பயணிகள் பலத்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.