56 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை ; அதிகரிக்கும் டெங்கு அபாயம்
கடந்த 24 மணி நேரத்துக்கு டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, நடப்பாண்டில் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 77,028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஆபத்து நிறைந்த வலயங்கள்
நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் உள்ள 162 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிக ஆபத்து நிறைந்த வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாதாந்த நிலவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,537 நோயாளர்களும் பதிவாகியுள்ள நிலையில், ஜூலை மாதத்தின் கடந்த 20 நாட்களில் மட்டும் 21,650 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது நோயாளர் உயிரிழப்பு விகிதம் 0.07% ஆகக் காணப்படுகிறது.
மாகாண ரீதியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர். இது மொத்த நோயாளிகளில் 52.67% ஆகும்.
அந்த மாகாணத்தில் இந்த வருடத்தில் 40,573 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், தென் மாகாணத்தில் 11,867 நோயாளர்களும் (15.41%), மத்திய மாகாணத்தில் 6,492 நோயாளர்களும் (8.43%) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.