பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன விடுத்த கடும் எச்சரிக்கை!
போராட்டங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச அதிகாரம் பயன்படுத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுவில் உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்பில் விளக்கமளிக்க அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுவை அழைத்திருந்தார்.
அங்கு விசேட உரையாற்றிய கமால் குணரத்ன, தற்போதைய நிலைமையை தானும் பாதுகாப்பு தரப்பினரும் மூன்று மாதங்களாக பொறுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராணுவம் பொறுமை காத்திருப்பது கோழைத்தனம் என சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் எதிர்காலத்தில் எவரேனும் அரச சொத்துக்களுக்கு அல்லது அரசாங்க அலுவலகங்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டால், அவசரகால சட்ட விதிமுறைகளின் அதிகபட்ச பலம் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.