சுரேஷ் சலேயின் குடும்பத்தினரை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களில் அவதூறு
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் குடும்பத்தினரை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வஜன அதிகாரம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சுரேஷ் சலேயை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (08) ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வஜன அதிகாரத்தின் உப தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சுரேஷ் சலேயின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக இழிவான மற்றும் அவதூறான பதிவுகள் பரப்பப்படுவதாகக் கூறினார்.

அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், இந்தப் பிரசாரங்களுக்குப் பின்னால் அரசியல் தொடர்புடைய சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் பதில்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையில், முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மகா சங்கத்தினர் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சத்தியாகிரகப் போராட்டத்தில் சர்வஜன அதிகாரம், தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.