முச்சக்கரவண்டியிருந்து சிறுவனை தள்ளிவிட்டவருக்கு மரண தண்டனை
முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த 16 வயதுடைய சிறுவனை, முச்சக்கரவண்டியிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில், குற்றவாளி என இனங்காணப்பட்ட நபருக்கு பதுளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு, ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் நேற்று (29) எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வாய்த்தர்க்கம்
பதுளை-பசறை வீதியில் 6ஆம் மைல்கல் பிரதேசத்தில் பசறை எல்டொப் தோட்டத்தில் வசித்த பிரான்சிஸ் சுதர்சன் என்ற 16 வயது சிறுவன், கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதியன்று முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கையில் வெளியில் தள்ளப்பட்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அந்த சிறுவன், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக சாட்சியங்களின் ஊடாக நிரூபணமாகியது. மரண தண்டனை வழங்கப்பட்ட நபருடன், உயிரிந்த சிறுவனுடன் மேலும் மூன்று சிறுவர்கள், மரண வீடொன்றுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதன்போது, மது போதையில் இருந்த 16 வயது சிறுவனுக்கும் பிரதிவாதியான (மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது என்பது வழக்கு விசாரணையிலிருருந்து தெரியவந்துள்ளது.
இச் சந்தர்ப்பத்தில், ஓடிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியிருந்து அந்த சிறுவனை, சந்தேகநபர் கீழே தள்ளி இருப்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.