புத்தளம் மாவட்டத்தில் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்!
புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ , பங்கதெனிய வெஹரகெலே பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காதில் இரண்டு ஹேண்ட்ஸ் ஃப்ரீயை அணிந்துகொண்டு தூங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே உயிரிழந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆராச்சிக்கட்டுவ - பங்கதெனிய வெஹரகல பகுதியைச் சேர்ந்த விஜயசூரிய குணவர்தன மஹவடுகே ஹசித் சந்தருவன் பெரேரா என்ற 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
தந்தை மரக்கறி விவசாயத்தில் ஈடுபட்டு வருவதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் தனது உடன்பிறந்த சகோதரனுடன் இணைந்து வாகன விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத் தினத்தன்று தாயும் தந்தையும் அதிகாலை மரக்கறி கொட்டகைக்கு சென்றுள்ள நிலையில், காலை 7.30 மணி ஆகியும் தம்பி எழுந்திருக்காததால், மற்றைய சகோதரன் அவர் உறங்கிக் கொண்டிருந்த அறையின் கதவைத் தட்டி எழுப்பியுள்ளார்.
எனினும், தூக்கிக் கொண்டிருந்த சகோதரனிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால், சந்தேகமடைந்த தான் சகோதரன் தூங்கிக்கொண்டிருந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதாக பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பின்னர், வெளியே சென்ற பெற்றோர்களை வீட்டுக்கு அழைத்து, அயலவர்களின் உதவியுடன் இளைஞனை உடனடியாக சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்து விட்டததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணையின் பின்பு, சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.