நுவரெலியாவில் 21 பேரை பலியெடுத்த கோர விபத்து ; வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்கு
கொத்மலை கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவத்தில், விபத்து ஏற்பட்டமைக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, சுஹுருபாயவில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
விபத்து தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை இதன்போது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் ஒப்படைத்தார்.
விபத்து நடந்த இடத்தில் இரும்பு வேலிகள், கொங்ரீட் தூண்கள், மின் குமிழ்கள், வீதி வேகத் தடைகள் அல்லது வீதி சமிக்ஞை பலகைகள் எதுவும் இல்லை என்பதால் விபத்துக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையும் காரணமென அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பஸ் 13 மணி நேரத்திற்கு பயணிக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அனுமதி பெறவில்லை என்றும், எனவே, பேருந்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளரான போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் கதிர்காமம் இ.போ.ச வுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.