இலங்கையில் அடுத்தடுத்து மீட்கப்படும் சடலங்கள்!
அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் நாளாந்தம் அகால மரணங்கள் அதிரித்து வரும் துயர நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் வீரங்குள மற்றும் ஹொரண பிரதேசத்தில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வீரங்குலவில் மீட்கப்பட்ட சடலம்
வீரங்குல மங்கலதிரிய பிரதேசத்தில் அத்தனகலு ஓயாவில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று இருப்பதாக நேற்று காலை பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பில் வீரங்குள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை.
அவர் 5 அடி 4 அங்குல உயரம் கொண்ட 60 வயது பெண் எனவும் அவர் சிவப்பு மற்றும் பச்சை நிற உடை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹொரணையில் மீட்கப்பட்ட சடலம்
இதேவேளை ஹொரணை மதுகஹவத்த பிரதேசத்தில் உள்ள இறப்பர் காணி ஒன்றில் இனந்தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக இன்று அதிகாலை கிடைத்த தகவலுக்கு அமைய ஹொரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 70 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர் நிறம் மாறிய சாரம் மாத்திரம் அணிந்திருந்ததாகவும், மேல் ஆடை ஏதும் அணியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சடலம் தொடர்பிலான நீதவான் விசாரணை இன்று இடம்பெறவுள்ளதுடன், சடலம் பொலிஸ் பாதுகாப்பில் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.