தந்தைக்கும் பாட்டிக்கும் தகராறு; மகளுக்கு நேர்ந்த கதி
இரத்தினபுரி - படஹேன பிரதேசத்தில் தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகி மகள் காயமடைந்துள்ளதாக அயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய மகளே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தந்தைக்கும் பாட்டிக்கும் தகராறு
காயமடைந்த 25 வயதுடைய மகள் தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனுடன் இரத்தினபுரி - படஹேன பிரதேசத்தில் உள்ள தனது தந்தை மற்றும் பாட்டியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி இரவு 08.30 மணியளவில் காயமடைந்த மகளின் தந்தை மதுபோதையில் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன்போது தந்தைக்கும் பாட்டிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது தந்தை, பாட்டியை கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதனை அவதானித்த மகள், தனது பாட்டியை காப்பாற்ற முயன்ற போது தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மகள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை இரத்தினபுரி - அயகம பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (23) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.