ஆபிரிக்க வைரஸ் நாட்டில் பரவும் ஆபத்தான நிலை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
கொழும்பு விமானத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் காரணமாக ஆபத்தான ஆபிரிக்க வைரஸ் நாட்டில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
விமானநிலையத்தின் பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்யும் பயணிகள் எந்த வித கட்டுப்பாடுகளும் அற்ற விதத்தில் வெளியேறுகின்றதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக அவர்களுடைய ஆவணங்கள் உடமைகளை சோதனை செய்யும் உத்தியோகத்தர்களிற்கு இதனால் ஆபத்து என பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.
அதேவேளை புதிய வைரசினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அல்பா போன்ற ஏனைய வைரஸ்களுடன் ஒப்பிடும்போது தென்னாபிரிக்க நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் 500 வீதம் அதிகமான பரவும் தன்மையை கொண்டது என்றும், ஆனால் இது குறித்து கவனம் செலுத்தப்படாதது ஆழ்ந்த கரிசனைக்குரிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் தற்போது பல நாடுகள் விமானசேவைகளை நிறுத்தியுள்ளன இலங்கையில் நிலைமை மிகவும் ஆபத்தானது திருப்தியளிக்க கூடிய சுகாதார பாதுகாப்பு பொறிமுறை நடைமுறையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமானநிலையத்தின் உள்ளே பொருட்களை கொள்வனவு செய்த பின்னரே உத்தியோகத்தர்கள் அவர்களின் ஆவணங்கள் உடமைகளை சோதனையிடுகின்றனர்.
இதன் காரணமாக அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களிற்கு பெரும் ஆபத்து காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் விமானநிலையத்தில் சுகாதார வழிகாட்டுதல்களில் தளர்வினை பின்பற்றுகின்றமையால் இலங்கை தென்னாபிரிக்க வைரசினால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது எனவும் அவர் கவலை வெளியிட்டார் .