இலங்கையில் சிறுவர்களிடம் ஏற்பட்டுள்ள அபாயம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறையினால் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அவர்களில் நால்வர் கடுமையான போஷாக்கு குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும், இந்த குழந்தைகளுக்கான விசேட போஷாக்கு உணவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்தியர் தெரிவித்தார்.
அத்துடன் விடுதியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலைமையை தடுக்கும் வகையில் வீட்டுத்தோட்டம் அமைப்பதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதுடன் குறுகிய காலத்தில் விளைச்சலைத் தரும் போஷாக்கு நிறைந்த உணவுகளை பயிரிடுவதில் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் தீபால் பெரேரா கோரிகை முன்வைத்துள்ளார்.