இலங்கையில் Ditwah புயலின் தற்போதைய நிலைவரம் ;வடக்கு கிழக்கு மக்களே அவதானம்
இலங்கையில் Ditwah புயல் 28.11.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி நிலைவரப்படி, தற்போது வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாகவும் இது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நேற்று (27) மாலை வரை மணிக்கு 18 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்த புயலானது தற்போது மணிக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் நகர்கின்றது.

மக்களே அவதானம்
நேற்றைய தினம் டிட்வா புயலின் மையச்சுழற்சி மணிக்கு 48 கிலோமீற்றர் என்ற அளவில் காணப்பட்டது. தற்போது மணிக்கு 32 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் செல்வாக்கினால் புயலின் நகர்விலும் மையச் சுழற்சியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று பிற்பகலில் மீளவும் நகர்வு வேகமும் மையச் சுழற்சியின் வேகமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மையம் முழுவதும் நிலப்பகுதியூடாகவே வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை( 29.11.2025) பிற்பகல் முல்லைத்தீவு மாவட்டத்தின் அமபலவன்பொக்கணை பகுதியூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இதன் இறுதித் தன்மையை நாளையே முடிவு செய்யலாம். இதனால் இன்றும் திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கண்டி, பொலன்னறுவை,அனுராதபுரம், புத்தளம், சிலாபம் குருநாகல், கொழும்பு மாவட்டங்களில் மிக கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளே தொடர்ந்து நிலப்பகுதியின் ஊடாக நகர்ந்து வந்த டிட்வா (Ditwah ) புயலினுடைய மையம் நாளை கடற்பகுதிக்குள் வெளியேறும்போது வடக்கு மாகாணம் குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மிகக் கனமழை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை முதல் மட்டக்களப்பு(சில பகுதிகளுக்கு நாளையும் மழை கிடைக்கும்) , அம்பாறை, அம்பாந்தோட்டை , காலி, மாத்தறை, மொனராகலை, பதுளை மாவட்டங்களில் படிப்படியாக மழை குறைவடையும்.
நாளை காலை முதல் நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, கொழும்பு மாவட்டங்களில் மழை குறைவடையும். நாளை நள்ளிரவு முதல் திருகோணமலை, வவுனியா, மன்னார் அனுராதபுரம் புத்தளம் மாவட்டங்களில் மழை குறைவடையும். எனவே மக்கள் அதற்கேற்ற வகையில் தம்மைத் தயார்ப்படுத்தி, இந்த சீரற்ற வானிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ளலாம்.

மேலும் மழை குறைவடைந்த பின்னர், உங்கள் பிரதேசங்களில் வெள்ளநீர் தேங்கி நின்றால், அது உங்களுக்கு நன்கு பழக்கமான பிரதேசம் என்றாலும் அதனுள் இறங்க வேண்டாம். ஏனெனில் வெள்ளநீர் அங்கே உங்களுக்கு தெரியாமல் புதிய குழிகளை உருவாக்கி விடும்.
இந்த வெள்ள மற்றும் நிலச்சரிவு அனர்த்தத்துக்கு பின்னரும் ஒரு சில நாட்கள் நாம் பொறுப்போடும் எச்சரிக்கை உணர்வோடும் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிடின் அனர்த்தத்துக்கு பின்னரும் ஒரு சில உயிரிழப்புக்களை நாம் தவிர்க்க முடியாது போய்விடும் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்தார்.