யாழில் 14 வருடங்களாக தேடுவாரற்று கிடக்கும் கலாச்சார மண்டபம்!
யாழ்.பருத்தித்துறை ஆத்தியடி பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பருத்தித்துறை கலாச்சார மண்டபம் 14 வருடங்கள் கடந்தும் தேடுவாரற்று திறக்கப்படாமல் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டில் வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கட்டப்பட்ட குறித்த கட்டடம் அதிகாரிகளின் முறையற்ற செயற்பாட்டினால் திறக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றது.
கடந்த 2008 ஆண்டு பருத்தித்துறை ஆத்தியடியைப் பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா சபைக்கும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்குமிடையில் 1049ஆம் இலக்கப் உறுதி பத்திரத்தின் படி 99 ஆண்டு கால குத்தகைக்கு மாதம் 500 ரூபாய் வாடகையாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவதாக செய்யப்பட்ட ஒப்பந்தம் பருத்தித்துறை கலாச்சார மண்டப தரப்பினரையும் அப்பகுதி மக்களையும் பாதிக்கும் வகையில் மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
அத்துடன் பருத்தித்துறையில் சுமார் 14 ஆயிரத்து 575 குடும்பங்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 925 பேரின் விருப்பங்களை அறியாது இரண்டாவதாக செய்யப்பட்ட உடன்படிக்கை அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
வடக்கு மாகாணசபையின் மக்கள் வரிப்பணத்தில் பெறப்பட்ட நிதியில் கட்டப்பட்ட குறித்த கட்டடம் பல ஆண்டுகாலமாகத் திறக்கப்படாமல் உள்ளமை அதிகாரிகளின் வினைதிறனற்ற செயற்பாட்டயே எடுத்துக்காட்டுகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரசேச செயலாளர், குறித்த பிரச்சினை தொடர்பில் இணக்கப்படு ஒன்றை எட்டியுள்ள நிலையில், விரைவில் கலாச்சார மண்டபம் திறக்கப்படும் எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.