பிரித்தானியாவில் மோசடி செய்த இலங்கை தமிழ் சட்டத்தரணிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் 2 ஆவது செயலாளர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இலங்கை சட்டத்தரணி ஒருவரை சட்டத்தரணியாக கடமையாற்றுவதை 6 மாதத்திற்கு இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்றைய தினம் (27-03-2023) உத்தரவு பிறப்பத்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எழுத்துப்பூர்வமாக குறித்த முறைப்பாடு செய்திருந்தார்.
அதில் ஆழ்வாப்பிள்ளை கங்காதரன் என்ற சட்டத்தரணி வஞ்சகம் மற்றும் மோசடி செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இருப்பதாக பொய்யாக உறுதிப்படுத்தும் வகையில் 2015 ஜூன் 5 ஆம் திகதி கடிதம் ஒன்றை வழங்கியிமைக்காக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட நபருக்கு ஐக்கிய இராச்சியத்தில் புகலிடம் கோருவதற்கான ஆதரவைப் பெறுவதற்காக வழங்கப்பட வேண்டிய அழைப்பாணைகள் மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தால் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தயாரித்ததாக சட்டத்தரணி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
சட்டத்தரணி நடந்து கொண்ட விதத்தை இலகுவாகக் கருதவோ மன்னிக்கவோ முடியாது என சுட்டிக்காட்டிய நீதியரசர் புவனேக அலுவிஹார, பிரதிவாதி, முதலில் கிடைத்த சந்தரப்பத்தில் அவர் தனது தவறான நடத்தையே ஒப்புக்கொண்டு வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தமைதான் அவருக்கு கருணை கிடைக்க ஒரேயொரு காரணம் என குறிப்பிட்டார்.
நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.