பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியவில்லை; தந்தையின் விபரீத முடிவால் தவிக்கும் குடும்பம்
வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொருளாதார பாதிப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெலிபென்ன - ஹோலின்போன் கொலனியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவரைக் காணவில்லை என அவரது மனைவி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அவரது வீட்டுக்கு அருகிலுள்ள இறப்பர் தோட்டத்தில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், மூன்று நாட்களாக குழந்தைகள் வீட்டில் சாப்பிட எதுவும் இருக்கவில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கணவன் கூலி வேலை செய்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் மனைவி தெரிவித்திருந்தார்.
எனினும், பின்னர் வீட்டிலுள்ள சில பொருட்களை விற்று பிள்ளைகளுக்கு உணவு கொண்டு வந்ததாக தெரிவித்த அவர், பணப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாமல் கணவர் இவ்வாறு உயிரை மாய்த்திருக்கலாம் எனவும் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.