10 மில்லியன் ரூபா அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!
தகவல்கள் அற்ற பெரும் அளவிலான அழகுசாதனப் பொருட்கள், புறக்கோட்டையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட பணியகத்தினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் நேற்று (09) கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள களஞ்சியம் ஒன்றை மையப்படுத்தி சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

சந்தை பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா
இதன்போது, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, சந்தை பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்ட உடலுக்குப் பூசும் கிறீம்கள் (Creams) மற்றும் லோஷன்கள் (Lotions) அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த தயாரிப்புகளில் உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி, உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளர் விபரங்கள் உள்ளிட்ட சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ள எந்தவொரு அடிப்படைத் தகவல்களும் குறிப்பிடப்படாமை இதில் உள்ள பாரதூரமான சட்டவிரோத நிலை என நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பொருட்கள் சில்லறை சந்தை ஊடாக நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்னரே, களஞ்சியசாலையிலேயே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தற்போது 13 வர்த்தக நாமங்களுக்கு உட்பட்ட அழகுசாதனப் பொருட்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை மேலதிக ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.