கொழும்பு மாநகர சபையில் ஊழல் மோசடி ; பொதுமக்களிடம் கோரப்பட்ட உதவி
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளையும் தகவல்களையும் கோரத் தொடங்கியுள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள், குற்றவியல் நம்பிக்கை துரோகம், அதிகாரம் மற்றும் அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்தல், சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கள் மற்றும் கொள்முதல் விதிமீறல்கள் தொடர்பில் அந்த ஆணைக்குழு விசாரிக்கவுள்ளது.

முறைகேடுகள்
அத்துடன் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்ற முறைகேடுகள், முறையான நடைமுறைகளை மீறி முன்னெடுக்கப்பட்ட வழக்குகள் மற்றும் இணக்கப்பாடுகள், இவற்றின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்திற்கு ஏற்பட்ட பாரிய நட்டங்கள் என்பன குறித்தும் இதன்போது விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி அநுர குமர திசாநாயக்கவினால், 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ், கடந்த 2025 டிசம்பர் 30 ஆம் திகதியிடப்பட்ட 2469/08 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சட்டத்தரணி பியசேன ரணசிங்க தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏக்கநாயக்க (இலங்கை கணக்காளர் சேவை - தரம் 1), டி.எஸ். விக்ரமசிங்க (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆணைக்குழு தனது முதலாவது இடைக்கால அறிக்கையை 3 மாதங்களுக்குள்ளும், இறுதி அறிக்கையை 6 மாதங்களுக்குள்ளும் ஜனாதிபதி செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தனிநபர்கள் அல்லது அமைப்புகள் தமது எழுத்துமூலமான முறைப்பாடுகளைச் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பலாம்.
செயலாளர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03. முறைப்பாடுகள் அனைத்தும் 2026 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முறைப்பாட்டாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். தமது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்கள் அதனைக் கோர முடியும்.
வாய்மூலமாகத் தகவல்களை வழங்க விரும்புவோர் 011 2 301 735 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து பெப்ரவரி 23 ஆம் திகதிக்கு முன்னர் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.