யாழில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா; 3வது நாளில் பீ.சி.ஆர் அறிக்கை
யாழ்.வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் உயிரிழந்த 74 வயதான பெண்மணிக்கு கொரோனா தொற்றுள்ளதாக 3வது நாளில் பீ.சி.ஆர் அறிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது.
திடீர் சுகயீனம் காரணமாக ஊரணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மாதிரிகள் மந்திகை ஆதார வைத்தியசாலை ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் திங்கள் கிழமை மாதிரிகளின் அளவு போதாது என அறிக்கையிடப்பட்டது.
இதனையடுத்து அவரது மாதிரிகள் மீளப்பெறப்பட்டு நேற்று மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் கொரோனா தொற்ற உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவுள்ளது.
இதவேளை, பருத்தித்துறை சுப்பர்மடத்தில் நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட பருத்தித்துறை இராஜகாமத்தைச் சேர்ந்த வைரவா நாகரட்ணம் (வயது -78) என்ற முதியவரின் மாதிரிகளும் மீளப்பெற வேண்டும் என்று அறிக்கையிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.