மாட்டிறைச்சியின் விலையை குறைக்கவே தேர்தலில் போட்டியிடுகின்றோம்
மாட்டிறைச்சியின் விலையை 1,700 ரூபாயாக குறைக்க இந்த தேர்தலில் சுயேட்சைக்குழு சார்பாக போட்டியிட்ட தீர்மானித்துள்ளதுடன், இறக்காமம் பிரதேச சபையில் தனித்து ஆட்சி அமைக்கவே முயற்சிக்கிறோம் என கால்பந்து சின்ன சுயேச்சைக் குழுத் தலைவர் சட்டத்தரணி கே.எல்.சமீம் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறக்காமம் பிரதேச சபை
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை இறக்காமம் பிரதேச சபையானது 3 ஆவது தேர்தலை முகம் கொடுக்கின்றதுகட்சிகளில் அவநம்பிக்கை காரணமாக நாம் சுயேட்சையில் களமிறங்கியுள்ளோம்.
அதே வேளை இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதும் அத்துடன் இறக்காமம் பிரதேசத்தில் மாட்டிறைச்சியின் விலையை 1,700 ரூபாய்க்கு வழங்குவதும் எமது சுயேட்சைக் குழுவின் நோக்கமாகும்.
இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவு இன்மையால் அம்பாறை பொது வைத்தியசாலையில் பதிவுகள் சிங்கள மொழியில் இடம்பெறுவதனால் அகமது என்ற பெயர் முகம்மது எனவும் அன்சார் என்ற பெயர் கின்சார் என்றும் கபீப் என்ற பெயர் குபாப் என்றும் மாறி வருவதனால் பாடசாலைக்கு மாணவர்களை சேர்ப்பதில் சத்தியகடதாசி தேடுகின்ற அவல நிலைக்கு இறக்காமம் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான உரிமை சார்ந்த பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகவே எந்தவித கட்சித்தலைவர்களதும் அழுத்தமின்றி இம்முறை சுயேட்சைக்குழுவில் சுயமாக இயங்க தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.