துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருள் கொள்கலன்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக சுமார் ஆயிரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இது பங்களித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே, குறித்த கொள்கலன்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பருப்பு, வெங்காயம், சீனி, உருளைக்கிழங்கு, நெத்தலிக் கருவாடு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் டொலர் பற்றாக்குறை மிகவும் பாரதூரமானதாக மாறி பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.